Thursday, October 22, 2015

74. காதலுக்கு காது போனது?


ஜி.பாலன் 
சிறு வயதில் அண்ணனின் காதலுக்காக கடிதம் கொடுக்க சென்றேன். அந்த கடிதம் பெண்ணின் தந்தைக்கு எப்படியோ கிடைத்துவிட்டது. அதை பற்றி விசாரித்தவர், என்னை அழைத்து பேசினார். நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ’பளார்’ என்று அறைந்து விட்டார்.

அவருடைய கோபமும், வேகமும் கலந்த அழுத்தமான அந்த உணர்வு என் கன்னத்தில் விழுந்த போது காது சவ்வு கிழிந்து போனது.

ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டுகிற எண்ணமெல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஒரு கன்னத்தில் ஒருத்தன் அறைந்தால் அவனது இரண்டு கன்னத்தையும் பேத்திருவேன்.

தவறு நம் மீது என்பதாலும், அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாகவும் அப்படியே அவர் எதிரில் நின்றேன். காதல் கடித்ததை ஊருக்கே உறக்க சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பெரிய மனிதர்.

அதன் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டேன் 

அந்த பெண்ணின் பெற்றோர் வேலை வேலை என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலே குறியாக இருந்தார்கள், அந்த பெண்ணுக்கு ஒரு நோய் வந்த போது கூட, வயசு பையன் கூட வயசு பெண்ணை அனுப்புகிறோமே என்று நினக்கவில்லை. எனது அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். வாரம் தோறும் மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய சூழல் அமைந்தது. வாலிப வயது அவள் மீது காதல் கொள்ள வைத்தது.

நோய் தீர்ந்த பிறகு அவளை அவரால் சந்திக்க முடியவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்கிற தவிப்பு அவருக்குள் அதிகமானது. அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை பிறந்தது. அதே சமயம் அவள் மீது அன்பும் மரியாதையும் அதிகம் இருந்தது. அதனால், அவளுடைய விருப்பத்தை தெரிந்து கொள்ள அந்த கடிதம் எழுதப்பட்டது.

அந்த கடித்தத்தை புத்தகத்தில் வைத்து கொடுத்து அனுப்பும் போது என்னிடம் சொல்லி அனுப்பி இருக்கலாம். என்னிடம் அவர் சொல்லவில்லை. நான் புத்தகத்தை ஆட்டிக் கொண்டு சென்றதில் கடிதம் தவறி கீழே விழுந்திருக்கிறது.

அது எப்படியோ யார் மூலமாகவோ அவளின் தந்தை கைக்கு சென்றதும் ஆத்திரத்தில் என்னை அழைத்து அறைந்து விட்டார். காதும் காதும் வைத்த மாதிரி முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை காது சவ்வு கிழியும் அளவிற்கு அடித்துவிட்டார். அது மட்டுமல்லாது ஊரைக் கூட்டி என் பொண்ணுக்கு கடிதம் கொடுத்துவிட்டார்கள் என்று சத்தம் போட்டார்.

அவரது தம்பி, அண்ணனுக்காக எனது அண்ணனிடம் மல்லுக்கு வந்தார். எனது அண்ணனை அடிக்க திட்டம் போட்டார்கள்.

வெளியூர் சென்றிருந்த எந்து அண்ணன், என்னை அறைந்ததை கேள்விப்பட்டு கொதித்து போனார். உடனே திருத்துறைப்பூண்டிக்கு சென்று ஒரு கத்தியை வாங்கிக் இடுப்பில் சொருவிக் கொண்டு வந்தார். வாய்ப்பு கிடைக்கும் போது தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தம்பியை அறைந்தவனை காலி பண்ணவும் முடிவு செய்திருந்தார்.

அவர்களுக்கு நான்கு பேர் முன் வந்தது போல, எங்களுக்கு நான்கு பேர் முன் வந்தார்கள். ‘’சண்முகத்து மேலே கை வைத்துப் பாருங்கள். அப்புறம் நடக்குறதே வேற’’ என்று வெளிப்படையாக பேசினார் க.உலகநாதன்.

பிரச்சனை பெரிதானது. பெண்ணின் வாழ்க்கை பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்தவர்கள், பிறகு சண்டை வேண்டாம் சமாதானம் ஆகிவிடாலாம் என்று சுமுகமாக பேசி முடிக்க இறங்கி வந்தார்கள்.

மூன்றாவது ஆட்கள் வேண்டாம் என்று எங்களுக்குள் பேசி முடித்துக் கொள்கிறோம் என்று எனது பங்காளிகள் பிரச்சனையை முடித்து வைத்தார்கள்.

அவசர அவசரமாக அந்தப் பெண்ணை சிறு வயதிலேயே வெளியூரில் திருமணம் செய்து வைத்தார்கள்.

ஆனால், அந்த வாலிப வயதில் எழுந்த அண்ணனின் காதலுக்கு எனது காது பஞ்சர் ஆனதுதான் மிச்சம்.

அப்போது அதன் பாதிப்பு தெரியவில்லை. காலம் கடந்து காது வலி காரணமாக வைத்தியம் பார்த்த போது, காது டிரம் ஓட்டையாக இருக்கிறது என்று ‘காது மூக்கு தொண்டை’ மருத்துவத்தில் கோல்டு மெடல் பரிசு பெற்ற டாக்டர் கருப்பையா பரிசோத்தித்து பதில் சொன்னார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கு உதவி கேட்டு விண்ணப்பித்தேன். உனக்கு செய்யாமல் யாருக்கு உதவுவது. சங்கத்திற்காக நிறைய உழைத்திருக்கிறாய் என்று சொல்லி கேயார் உடனடியாக  கையெழுத்துப் போட்டார். அதே போல கே.ஆர்.ஜியும் உதவினார்.

அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன்பு எனக்கு இருந்த பெரிய கவலை, எனது அண்ணன் மகளுக்கு திருமணம் செய்து வைக்காமல் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்சம். அதனால், எனது மனைவியை அழைத்து எனக்கு எதாவது ஆகிவிட்டால், அண்ணன் மகளை நீதான் கூட இருந்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

என் அண்ணன் எங்களுக்காக உழைத்தவர். அவரை விட்டுவிடக் கூடாது என்கிற விசுவாசம் அக்கரை அதிகம் இருந்தது.

காது அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்த போது என் நலத்தை விசாரிப்பதற்காக எனது அண்ணன் ஊரில் இருந்து வந்திருந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது, அக்காவின் உடல் நிலைப் பற்றியும், மகளை குமாருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழல் பற்றியும் அண்ணனிடம் தெரிவித்தேன்.

மகள் செல்விக்கு சிறு வயது என்பதால் அண்ணன் யோசித்தார்.

அக்காவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அந்த குடும்பத்தை எடுத்துச் செல்ல ஒரு பெண் வேண்டும். வெளியில் இருந்து பெண் எடுத்தால், அவள் தனிக் குடித்தனம் என்று ஒதுங்க ஆரம்பித்தால், பசங்க, அத்தான் நிலமை என்ன ஆகும் என்கிற கவலையாக இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன்.  அதனால், நம்மவீட்டு பெண் என்றால் உரிமையோடு பார்த்துக் கொள்வாள் என்று சொன்ன போது ‘உன் இஷ்டம்’ எனறார்.

அக்கா வந்ததும் இது விஷயமாக பேசுவோம் என்று முடிவு செய்தேன்.

அப்போது எனது அண்ணனின் காதலுக்காக என் காது சவ்வு கிழிந்தது. இப்போது அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்க முடிவான போது என் காது சரியாகி இருந்தது. 

இடையில் இத்தனை வருட வாழ்க்கையில், சொல்லும் தகவல் சரியாக காதில் விழாத போது, திரும்ப சொல்லுங்க என்று கேட்டால்,  ’’செவிட்டு பயலுக்கு மறுபடியும் சத்தமா சொல்லுங்க என்பார் அண்ணன்.

அவருடைய காதலுக்கு என் காது செவிடாகி போனது அவருக்கு தெரியாதே?

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...