Friday, October 23, 2015

71. கிங் படத்தில் நடந்த மாற்றம்

ஜி.பாலன்

பிரசாந்த் நடித்த ‘சாக்லேட்’ படம் இயக்கிக் கொண்டிருந்த போது, மியாவ் படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். அப்போது அவருக்கு நடிகர் விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஏற்கனவே விஜய்யை சந்தித்து ‘பகவதி’ படத்தின் கதையை சொல்லி இருந்தாராம் ஏ.வெங்கடேஷ். அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அப்போது விஜய் கொடுத்துவிட்டார். இதனால் ‘மியாவ்’ படத்தை துவங்கவில்லை. 

உமாபாலன் படமும், ஏ.வெங்கடேஷ் படமும் துவங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேதனை அடைந்தார் முருகானந்தம்.

இந்த நிலையில் அவரை சந்தித்த இயக்குனர் பிரபு சாலமன், நடிகர் விக்ரமிடம் கதை சொல்லி இருக்கிறேன். அவர் நடிக்க தயாராக இருக்கிறார் என்கிற தகவலை தெரிவித்தார்.

கிங் - விக்ரம், சினேகா 
கிண்டியில் குதிரை பந்தயம் நடக்கும் மைதானத்தில், ‘தில்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் விக்ரம். அவரை நானும், முருகானந்தமும் நேரில் சென்று சந்தித்தோம்.

முதலில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தவர், பிறகு முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், ‘தில்’ படம் வெளியானதும் எவ்வளவு சம்பளம் என்பதை சொல்கிறேன்ம், என்றார்.

அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் விக்ரம் நடித்த ‘கிங்’ படம்.

மிடில் கிளாஸ் மாதவன் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தினா. அவரை ஒப்பந்தம் செய்து ஒன்பது பாடல்களை கலசா ஒளிப்பதிவு கூடத்தில் பதிவு செய்தார் முருகானந்தம். பாடல்களை கவிஞர் வைரமுத்து, ஜீவன் இருவரும் எழுத, சங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன், திப்பு, கிளிண்டன், சுஜாதா, மகாலட்சுமி ஐயர், மாதங்கி ஆகியோர் பாடி இருந்தனர்.

இயக்குநர் பிரபு சாலமன் 
அலுவலக நிர்வாகத்தை என்னுடைய அக்காள் மகன் சங்கர், ரங்கராஜ், ராமநாதன் ஆகியோர் கவனித்துக்கொள்ள, மூர்த்தி, விமல் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தார்கள். தயாரிப்பு நிர்வாகத்தை கே.கே.ரவி தலைமையில், லோகு, அண்ணாமலை, முருகன் ஆகியோர் கவனிக்க, படப்பிடிப்பு துவங்கியது.

பிரபு – கார்த்திக் கூட்டணியில் கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை பிரபு என்கிற பெயரில் இயக்கிய பிரபு சாலமன், ‘கிங்’ படத்தை ஏ.எக்ஸ். சாலமன் என்கிற பெயரில் இயக்கினார்.

இந்தியன் தியேட்டார் புரொடக்சன் என்கிற பட நிறுவனத்தை துவங்கி, தனது பெயரை எஸ்.கே.கிருஷ்ணகாந்த் என்று மாற்றிக் கொண்டார், முருகானந்தம்.  

ஸ்டான்லி, பருத்தியூர் லட்சுமணன் இருவரும் இணை இயக்குனர்களாக பணிபுரிய, பிரகாஷ், ஜெயவேல், ரமேஷ், பாலகுரு, பாலசங்கர் ஆகியோர்  உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தனர். 

இசையமைப்பாளர் தினா 
ஜெயபாரதி ஹவுசில் பொன்னம்பலம் குழுவை விக்ரம் பழிவாங்குவது போன்ற காட்சியை எடுத்தார்கள். காசிமேடு நடுக்கடலில் மகாநதி சங்கரை அடித்து கல்லை கட்டி கடலுக்குள் போடுவது போன்ற பரபரப்பான காட்சியை படமாக்கினார்கள்.

ஒவ்வொரு எதிரியையும் விக்ரம் பழி வாங்கும் போல எடுக்கப்பட்ட பல காட்சிகள், பல நாட்கள் படமாக்கப்பட்டது. ஆனால், அதிரடியான காட்சிகளை கொண்ட அந்த கதையை, திடீர் என ஓரம்கட்டிவிட்டு, பிறகு வேறு ஒரு கதையை படமாக்க, படக்குழுவுடன் காரைக்குடி, அம்பாசமுத்திரம் போன்ற இடங்களுக்கு சென்றார் பிரபு சாலமன்.

ஆனால், முதலில் எடுத்த கதைக்கு வைத்த பெயரையே இரண்டாவதாக எடுத்த கதைக்கும் வைத்திருந்தார்கள். 

விக்ரம் ஜோடியாக சினேகா நடிக்க, இவர்களுடன் நாசர், ஜனகராஜ், வடிவேலு, சந்தானபாரதி, அனுமோகன், மதன்பாப், சுமித்ரா, சபீதா ஆனந்த், ஸ்ரீகாமு உட்பட பலர் நடித்த அந்தப் படத்திற்கு ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்தார்.

எம்.சுகுமார், புகைப்பட கலைஞர் 
மைனா, கும்கி படங்களின் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இந்தப் படத்தில் புகைப்பட கலைஞராக அறிமுகமானார். கலை இயக்குநர் எஸ்.ஏ.சி.ராம்கி, அவரது உதவியாளர் பாபு, எடிட்டர் லான்சி மோகன், நடன இயக்குனர்கள் சின்னி பிரகாஷ், தினேஷ், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் என பலர் பணியாற்றிய இந்தப் படத்தின் மூன்று பாடல்களை, புரமோஷன் பாடலாக உருவாக்கி இருந்தார், ‘மச்சி’ படத்தின் இயக்குனரான கே.எஸ்.வசந்த்.

இந்தப் படத்தில் மக்கள் தொடர்பாளராக நான் பணிபுரிவேன் என்று நம்பினேன். ஆனால், தனது மக்கள் தொடர்பாளர் ஜான்சன் என்பவரை விக்ரம் அனுப்பி இருந்தார். அதனால், நான் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்தின் நண்பராகவே இருக்க வேண்டியதாகி விட்டது. இப்போதும், அவரது நல்ல நண்பராக இருக்கிறேன்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி வெளியான கிங் படம், எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

கிங் - ஜனகராஜ், நாசர், விக்ரம், சினேகா 
படப்பிடிப்பு துவங்கும் முன்பே, தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷன்காந்த் திருமணம், அவரது சொந்த ஊரான தருமபுரில் எளிமையாக நடைபெற்றது. சென்னையில் இருந்து இரண்டு கார்கள் மூலம் படக்குழுவினர் மட்டுமே சென்று வந்தோம்.  

‘கிங்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ‘மியாவ்’ படத்திற்கு உதவி இயக்குனர்களாக பணிபுரிய வந்த சுப்பிரமணியம் சிவா, கே.எஸ்.வசந்த் இருவருக்கும் தனித்தனியாக அறைகள் கொடுத்து, சிவா, தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ கதையை உருவாக்கவும், வசந்த், துஷ்யந்த் நடித்த ‘மச்சி’ கதையை உருவாக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார், தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த்.

அந்தப்பட அனுபவங்களைப் பற்றி அடுத்த கட்டுரைகளில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...