Thursday, October 22, 2015

72. பொள்ளாச்சியில் உருவான ‘தென்காசிப்பட்டணம்’

எஸ்.எஸ்.துரைராஜ் 
திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் வி.சேகர் இயக்கிய பல குடும்ப செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவை படங்களை செ.கண்ணப்பனுடன் இணைந்து தயாரித்த, எஸ்.எஸ்.துரைராஜு, கமர்சியல் படங்களை தயாரிக்க முடிவு செய்தார்.

இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கிலி முருகன், எடிட்டர் மோகன் ஆகியோருடன் இணைந்து மலையாளத்தில் வெளியான ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை விலைக்கு வாங்கினார்.

மலையாளத்தில் வெளியான ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை இயக்கிய ராஃபி, தமிழிலும் இயக்க வேண்டும் என்று கேட்ட போது, அவர், தனது தம்பி ஷாஃபி இயக்குனராக அறிமுகமாகும் ‘ஒன் மேன் ஷோ’ படத்திற்கு திரைக்கதை எழுதவும், அவருக்கு உதவியாக இருக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

அதனால், தமிழில் யாரை இயக்க வைப்பது, யாரை கதாநாயகனாக நடிக்க வைப்பது என்று ஆலோசனைகள். நடந்தன.

என்னை அழைத்து கேட்ட போது, டி.பி.கஜேந்திரன் ‘பட்ஜெட் பத்மநாபன்’ படத்தை சொன்ன மாதிரியே இயக்கி கொடுத்தார். அதனால், கே.ஆர்.ஜி. அவர்கள் லாபம் அடைந்தார். அது போல அவரை இயக்க வைக்கலாம் என்று தெரிவித்தேன்.

ஆனாலும், தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தன. தனது மகன் ராஜாவை இயக்குனராக தெலுங்கு மொழியில் அறிமுகப்படுத்த முடிவு செய்த எடிட்டர் மோகன், அந்த கூட்டணியில் இருந்து விலகி, ‘தென்காசிப்பட்டணம்’ படத்தை தெலுங்கு மொழியில் ‘அனுமான் ஜங்க்ஷன்’ என்கிற பெயரில் தயாரித்தார். அதில் அர்ஜுன், ஜெகபதி பாபு இருவரும் நடித்தனர்.

தமிழில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான பிறகு, அவரது சம்பளம் அதிகமாக இருக்கிறது என்று சங்கிலி முருகனும் விலகிக் கொண்டார். அதன் பிறகு சரத்குமார், நெப்போலியன் இருவரும் நடிக்க படத்தை துவங்குவது என்று முடிவு செய்து, இயக்குனராக மனோஜ்குமாரை ஒப்பந்தம் செய்தார் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு.

என்னிடம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய சொன்னார், வடபழனியில் உள்ள ஆதித்யா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அறிவிப்பும் வெளியானது.  

மறுவாரம், இயக்குனர் மனோஜ்குமாரை விஜயகாந்த் அழைத்து ‘ராஜ்ஜியம்’ பட வேலைகளை உடனே துவங்க சொன்னதால், மனோஜ்குமார் ‘தென்காசிபட்டணம்’ படத்தை தனது இணை இயக்குனர் ஆர்.எஸ்.ராம்நாத் என்பவரை வைத்து துவங்க விரும்பினார். அதற்கு தயாரிப்பாளர் துரைராஜு சம்மதிக்கவில்லை.

அதனால், கே.எஸ்.ரவிகுமார் உட்பட சில இயக்குனர்களிடம் ஆலோசனை நடத்தியவர், பிறகு மலையாளத்தில் இயக்கிய ராஃபி ‘ஒன் மேன் ஷோ’ வேலைகளை முடித்துவிட்டார் என்பதை அறிந்து, அவரையே ஒப்பந்தம் செய்தார்.

செ.கண்ணப்பன், எஸ்.எஸ்.துரைராஜ்
அவர் மூலமாக மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தாவர்மாவையும் ஒப்பந்தம் செய்தார்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் பட துவக்க விழாவும், கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள ஒரு பங்களாவில் படப்பிடிப்பும் என பட வேலைகள் தீவிரமானது.

மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த வேடத்தில் சரத்குமார் நடிக்க, லால் நடித்த வேடத்தில் நெப்போலியன் நடித்தார். திலீப் நடித்த வேடத்தில் விவேக் நடிக்க, சம்யுக்த வர்மா, தேவயானி, அஸ்வதி, சார்லி, வினுசக்கரவர்த்தி, டெல்லிகணேஷ், பாண்டு, குமரிமுத்து, கோவைசரளா, ஸ்ரீவித்யா, கல்பனா, தியாகு, மயில்சாமி என பலர் நடித்தனர்.

கோயம்புத்தூரை தொடர்ந்து பொள்ளாச்சியை சுற்றிய பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

எடிட்டர் மோகன் 
மலையாளத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த போபன், ஒளிப்பதிவு செய்த சுகுமார், படத்தொகுப்பு செய்த ஹரிஹரபுத்திரன், இசையமைத்த சுரேஷ் பீட்டர் ஆகியோர் தமிழிலும் பணிபுரிந்தார்கள். பாடல்களை கவிஞர் வாலி எழுத, வசனங்களை வி.பிரபாகர் எழுதினார்.

மனோ, ஸ்ரீனிவாஸ், மாணிக்க விநாயகம், ஸ்ரீராம், சித்ரா, சுவர்ணலதா, சுஜாதா, சுரேஷ் பீட்டர் ஆகியோர் பாடல்களை பாடி இருந்தனர். நடனக் காட்சிகளை பிருந்தா, கலா, கூல் ஜெயந்த் ஆகியோர் அமைக்க, சண்டைக் காட்சிகளை படமாக்கினார் ஜாக்குவார் தங்கம்.

பொள்ளாச்சி மார்க்கெட்டில் தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது.

சங்கிலி முருகன் 
இந்தப் படத்திற்கு புகைப்பட கலைஞராக எல்.மூர்த்தி பணியாற்ற, நெல்லை சுந்தராஜனும், நானும் மக்கள் தொடபாளராக பணியாற்றினோம். சேத்தூர் தவகுரு ஒப்பனை, கணேசன் காஸ்டியூம், தயாரிப்பு மேற்பார்வை வி.எம்.பாபுஜி, தயாரிப்பு நிர்வாகம் எஸ்.முருகன், அலுவலக நிர்வாகம் எஸ்.தனலிங்கம், அண்ணாத்துரை, சேகர், ஐயப்பன் ஆகியோர் கவைக்க, தயாரிப்பு நிர்வாக ஆலோசனையை நாராயணன் ஏற்றிருந்தார். மேக்ஸ் டிசைனராக பணியாற்ற அவருக்கு உதவியாக இருந்தாரா, டி.வேலு

மாஸ் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜு அவர்கள் தயாரித்த ‘தென்காசிப்பட்டணம்’ படம், 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி வெளியானது.

படத்தில் விவேக், சார்லி இருவரும் மாடு தொலை போர்த்திக் கொண்டு நடித்த நகைச்சுவை காட்சிக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு லட்சம் செலவில் மோல்டரால் அந்த மாடு உருவாக்கப்பட்டது.

இயக்குநர் மனோஜ்குமார் 
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் போது, ரயில் எஞ்சின் போன்ற செட் தமிழகம் எங்கும் சென்று வரவேற்பை பெற்றது போல, பிரத்யேகமாக ஒரு வேனில் மேடை அமைத்து அதில் அலங்காரம் செய்து அந்த மோல்டு மாட்டை நிற்க வைத்து முக்கிய நகரங்களில் சுற்றி வர ஏற்பாடு செய்தார், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு . 

இயக்குநர் ராஃபி 
அதே போல கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடந்த போது, படப்பிடிப்பை காண தினம் ஆயிரக் கணக்கானோர் திரண்டதால், படப்பிடிப்புக்கு இடையூறு இல்லாமல், ரசிகர்கள் நடிகர்களை பார்க்கும்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜு மதியம் ஒரு மணிக்கும், மாலை ஆறு மணிக்கும் நடிகர்களை சந்திக்கலாம் என்று ஒரு போர்டு வைத்து அதன் படி ஒரு மேடையில் நடிகர்கள் தோன்றி ரசிகர்களுடன் பேச ஏற்பாடு செய்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது பிஜூ மேனனை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார் சம்யுக்த வர்மா.
தென்காசிப்பட்டணம் பட துவக்க விழாவில் நான் எழுதிய குடிமகன் நூலை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வெளியிட, இயக்குநர் வி.சேகர் பெற்றுக் கொண்ட போது எடுத்த படம் 


No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...