Thursday, August 20, 2015

40. திறமை இருந்தாலும் சிபாரிசு வேண்டும் - ஜி.பாலன்


ஜி.பாலன்

என்னுடைய இந்த தொடர் கட்டுரையில் சுவராஸ்யத்திற்காக எதையும் சேர்க்கவில்லை. கற்பனை எதுவும் கிடையாது. நான் வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்து, அதை அசைப் போட்டு எழுதி வருகிறேன். அவ்வளவுதான். 

சினிமாத்துறையில் இயக்குநராக வேண்டும் என்கிற பெரிய கனவுகளுடன், நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் வந்தேன். அதற்கான முயற்சியில் நான் பட்ட கஷ்டங்களை, அந்த அனுபவங்களை  எழுதுகிறேன். இதை எழுதும் போது என் மனதில் சுமை குறைக்கிறது. நிம்மதி அடைகிறேன்.  

கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது, நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்து எழுதத் துவங்கினேன்.  இதில் புதுமையோ, எதிர்ப் பார்ப்போ இருக்காது என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரையை படித்து நேரிலும், அலைபேசி வாயிலாகவும் பாராட்டு தெரிவித்தனர். சிலர் கட்டுரையின் இறுதியில் லைக் பொடுகின்றனர். கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரு நண்பர் இருபது நிமிடம் பேசியவர், இந்த கதையில் விஷயம் இருக்கிறது. படமாக எடுக்கலாம். திரைக்கதை எழுதி கொடு என்றார். ஒருவர் மெகா தொடர் எடுக்கலாம் என்றார்.

நான் இப்படி எதையும் நினைத்து எழுத வில்லை. உண்மையைச் சொல்லப் போனால், ஒவ்வொரு நாளும் எழுத அமரும் போதுதான் அந்த கட்டுரைக்கான அனுவபம் நினைவுக்கு வருகிறது.  பல சம்பவங்களை ஞாபகப்டுத்திப் பார்க்கும் போது அதில் நிறைய தகவல் கிடைக்கிறது. 

அப்படி ஒவ்வொரு சம்பவத்துக்கும் விவரமாக எழுதினால் சினிமாவுக்கு வந்த அனுபவத்தில் இருந்து விலகி, வேறு ஏரியாவுக்கு சென்றதாகிவிடும். அதனால், திரையுலகிற்கு வந்த அனுபவத்தை மட்டும் சுருக்கி எழுதுகிறேன். 

நேற்று ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து, ’’பிளாக் டிக்கெட் விற்றது  கூட எழுதி இருக்கிறீர்களே’’ என்று கேட்டார். 

அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே?. இந்த திரைத் துறைக்குள் வர அந்த வேலையேல்லாம் செய்திருக்கிறேன் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்! 

யாருடைய சிபாரிசிலும் இந்த இடத்திற்கு நான் வரவில்லை. ஒரு சின்ன குக்கிராமத்தில் இருந்து வந்து, பெரிய படிப்பு எதுவும் இல்லாமல், எந்த புரிதலும் இலாமல், சென்னைப் பக்கமே வந்திராத நான்,  இந்த துறைக்கு வருவது என்பது என்னைப் பொருத்தவரை பெரிய விஷயமே. 

இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தெரிந்தவனாக இருக்கிறேன். பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து ஜாம்பவான்களுடன் பேசி பழகிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். பிரிண்ட் மீடியா, டி.வி.மீடியா, சினிமா மீடியா என இந்த மீடியாவின் தொழில் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறேன். 

இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன்பு, நான் முயற்சி செய்த காலத்தில் திரையுலகம் ஒரு இரும்புக்கோட்டை போல இருந்தது. தனுள் நுழைவது கடினமாக இருந்தது.  

உறவினர் மூலமாக வருபவர்களுக்கும், திரையுலக்கினர் வாரிசுகளுக்கும் திரையுலகில் நுழைவது எளிதாக இருந்தது. அதன் பிறகு அவர்கள் திறமையை வைத்து நின்று கொள்வார்கள்.   

நடைமேடை இல்லாத இடத்தில் இருந்து ரயில் ஏற கஷ்டமாக இருக்கும். நடைமேடையில் நின்று ரயில் ஏறினால் ஈசியாக இருக்கும். நடைமேடை போல யாராவது சினிமாவில் இருந்தால், அவர்கள் சிபாரிசு கிடைத்தால்  நாம் உடனே எந்த துறைக்கு செல்ல ஆசைப் படுகிறோமோ, அந்த துறைக்கு ஈசியாக அவர் மூலமாக சென்று விடலாம். 

அதனால், நடைமேடை இங்கு அவசியமாக இருக்கிறது. நடைமேடை போல இங்கு எனக்கு தெரிந்தவர் கிடைத்திருந்தால், நான் எப்பவோ உதவி இயக்குநர் ஆக சேர்ந்து, அனுபவம் பெற்று, இயக்குநர் ஆகி இருப்பேன். 

அப்படி நடைமேடை இல்லாமல் நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டவன் நான்.  சென்னைக்கு வந்து பல நாட்கள் நடைபாதையில் படுத்து உறங்கி வாய்ப்பு தேடி இருக்கிறேன். 

நானே பிளாட்பாரமாக இருந்து கொண்டு சினிமா என்கிற ரயிலில் ஏற பிளாட்பாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க என் முயற்சியால், பல அவமானங்கள், பல வேதனைகள், சோதனைகள் கடந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். 

அதனால், உண்மையை மறைத்து எழுத விரும்பவில்லை. இது சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் எழுதவில்லை. அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. அதனால், எழுதுகிறேன். 

திரையுலகில் தன்னை வளர்த்துக் கொள்ள வழி தெரியாமல், திரையுலகிற்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் பலருக்கு, திரையுலகில் எந்த துறையில் வெற்றிபெற வேண்டும் என்று வர விரும்புகிறார்களோ அவர்களுக்கு வழிகட்ட இனி என்னுடைய கட்டுரைகளில் பலன் இருக்கும்.

திரையுலகில் நான் அடியெடுத்து வைத்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஒரு பத்திரிகை தொடர்பாளனாக, பத்திரிகையாளனாக, எழுத்தாளனாக, இயக்குநராக நான் இருந்து வருகிறேன்.

எனது இந்தப் பயணத்தில் நிறைய அனுபவம் பெற்றேன். அன்று முதல் இன்றுவரை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கும் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

பத்திரிகை தொடர்பாளர் ’குருநாதர்’ டைமண்ட் பாபு, தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., எஸ்.எஸ்.துரைராஜ், வி.சேகர், பார்த்திபன், பங்கஜ் மேத்தா, வெங்கட், சித்ரா லட்சுமணன்,  இசையமைப்பாளர் வீ.தஷி, பத்திரிகையாளர்கள் தேசிங்கு, திருவாரூர் குணா, தமிழ்மகன், சாருப்ரபா சுந்தர், சுந்தர்ராஜன், கடற்கரை, சிவக்குமார், என பலர் எனக்கு வாய்ப்பளித்து என் வளர்சிக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என் நன்றியை தனிதனியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரை தொடர் வழக்கம் போல நாளை இடம் பெறும். நன்றி

 (என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...