Sunday, April 22, 2018

என் திரையுலக அனுபவங்கள்


G.BALAN, FILM DIRECTOR
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது, நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ‘என்னுடைய திரையுலக வாழ்க்கை அனுபவங்கள்’ என்கிற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எனது முகநூலில் எழுதி வந்தேன். 

அந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த பதிவு 

சினிமாத்துறையில் இயக்குநராக வேண்டும் என்கிற பெரிய கனவுகளுடன், நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் சென்னை வந்த எனக்கு, இங்கு ஏற்பட்ட அனுபவங்களும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும் அதிகம். அந்த நினைவுகளை ஞாபகங்கப்படுத்தி பார்க்கும் முயற்சியாக பிறந்தவைகள்தான் இந்த கட்டுரைகள்.

படிக்க சுவராஸ்யம் கூட்ட வேண்டும் என்பதற்காக எதையும் சேர்க்கவில்லை. அதே போல கற்பனை கிடையாது. நான் வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்து, அதை அசைப் போட்டு எழுதி இருக்கிறேன்.

இந்த கட்டுரைகளை முகநூலில் எழுதிய போது,சில நண்பர்கள் தொடர்ந்து படித்து, நேரிலும், அலைபேசி வாயிலாகவும் பாராட்டு தெரிவித்தனர். சிலர் கட்டுரையின் இறுதியில் விருப்பம் தெரிவத்தனர். சிலர் கருத்து பதிவிட்டனர்.

ஒவ்வொரு நாளும் எழுத அமரும் போதுதான் அந்த கட்டுரைக்கான தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. என் நினைவுகளில் நீந்தி பல சம்பவங்களை ஞாபகப்படுத்தி பார்த்து சுடசுட எழுதினேன். சுயசரிதை எழுதும் அளவுக்கு நான் உயர்ந்துவிடவில்லை. அதே நேரம் என்னுடைய அனுபவத்தை இறக்கி வைப்பதில் சுகம் கண்டேன். 

நான், யாருடைய சிபாரிசிலும் இந்த இடத்திற்கு வரவில்லை. ஒரு சிறிய குக்கிராமத்தில் இருந்து வந்து, பெரிய படிப்பு எதுவும் இல்லாமல், எந்த புரிதலும் இலாமல், சென்னைப் பக்கமே வந்திராத நான்,  இந்த துறைக்கு வருவது என்பது என்னைப் பொருத்தவரை பெரிய விஷயமே.

இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தெரிந்தவனாக இருக்கிறேன். பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து ஜாம்பவான்களுடன் பேசி பழகிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். பிரிண்ட் மீடியா, டி.வி.மீடியா, சினிமா மீடியா என இந்த மீடியாக்களின் தொழில் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறேன்.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன்பு, நான் முயற்சி செய்த காலத்தில் திரையுலகம் ஒரு இரும்புக்கோட்டை போல இருந்தது. இதனுள் நுழைவது கடினமாக இருந்தது. 

நடைமேடை இல்லாத இடத்தில் இருந்து ரயில் ஏற கஷ்டமாக இருக்கும். நடைமேடையில் நின்று ரயில் ஏறினால் எளிதாக இருக்கும். நடைமேடை போல யாராவது சினிமாவில் இருந்தால், அவர்கள் சிபாரிசு கிடைத்தால்  நாம் உடனே எந்த துறைக்கு செல்ல ஆசைப் படுகிறோமோ, அந்த துறைக்கு எளிதாக அவர் மூலமாக சென்று விடலாம்.

அதனால், நடைமேடை இங்கு அவசியமாக இருக்கிறது. நடைமேடை போல இங்கு எனக்கு தெரிந்தவர் கிடைத்திருந்தால், நான் எப்பதோ உதவி இயக்குநர் ஆக சேர்ந்து, அனுபவம் பெற்று, இயக்குநர் ஆகி இருப்பேன்.

அப்படி நடைமேடை இல்லாமல் நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டவன் நான்.  சென்னைக்கு வந்து பல நாட்கள் நடைபாதையில் படுத்து உறங்கி வாய்ப்பு தேடி இருக்கிறேன்.

பல அவமானங்கள், பல வேதனைகள், சோதனைகள் கடந்து இந்த இடத்திற்கு வந்திருந்தாலும், சமூகம் இல்லாமல் நான் இல்லை என்பதை அறிவேன். திரையுலகில் நான் அடியெடுத்து வைத்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பத்திரிகை தொடர்பாளனாக, பத்திரிகையாளனாக, எழுத்தாளனாக, இயக்குநராக நான் செயலாற்றி இருக்கிறேன்.

எனது இந்தப் பயணத்தில் நிறைய அனுபவம் பெற்றேன். அன்று முதல் இன்றுவரை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

பத்திரிகை தொடர்பாளர் என் ’குருநாதர்’ டைமண்ட் பாபு, தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., எஸ்.எஸ்.துரைராஜ், வி.சேகர், பார்த்திபன், பங்கஜ் மேத்தா, வெங்கட், சித்ரா லட்சுமணன், இசையமைப்பாளர் வீ.தஷி, பத்திரிகையாளர்கள் தேசிங்கு, திருவாரூர் குணா, தமிழ்மகன், சாருப்ரபா சுந்தர், சுந்தர்ராஜன், கடற்கரை, சிவக்குமார், ஸ்ரீதேவி குமரேசன் என பலர் என் வளர்சிக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை தனிதனியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவு பற்றிய உங்களின் விமர்சனங்களை வரவேற்கிறேன். என்னை மேம்படுத்திக் கொள்ள அந்த விமர்சங்கள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். 

நன்றி

என்றும் தோழமையுடன்
ஜி.பாலன் 



பாலனின் 50 ஆம் ஆண்டு பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு 






No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...