Sunday, April 22, 2018

3 நாடகம் பார்க்கும் போது சண்டை


G.Balan
நிலவு வெளிச்சத்தில் ஒத்தையடி பாதையில், வயல் வரப்பு வெடுப்புகளில் காலை இடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக குறுக்கு வழியில் விரைந்து வந்தோம். நாடகம் தொடங்குவதற்கு முன் திரையை மூடிக் கொண்டு அனைவரும் சேர்ந்து பாடும் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள்.

காளியம்மன் கோவிலை பார்த்தபடி நாடக மேடை அமைத்திருந்தார்கள். கோவிலுக்கும் நாடக மேடையை இணைத்தும் நீளமான பந்தல் போட பட்டிருந்தது. பந்தலுக்கு கீழே ஆண்கள் அமர்திருந்தார்கள். பந்தலுக்கு வலது புறத்தில் கயிறு கட்டி பெண்களுக்காக இடம் ஒதுக்கி இருந்தார்கள்.

மேடைக்கு அருகில் இடம் கிடைக்கவில்லையே என்கிற வருத்ததுடன் இடம் தேடினேன். அண்ணன் செலவுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு குலுக்கல் கொட்டக் கடைக்கு விளையாட சென்று விட்டார். அக்கா, தங்கையுடன் காளியம்மனை வணங்கிக் கொண்டிருந்தார் அம்மா.

கருப்பண்ணா சாமி சிலைக்கு அருகில் சிறிய இடம் தெரிய, அங்கு சென்று பாயை விரிக்க முயன்ற போது, காலை நீட்டி அமர்ந்திருந்த ஒரு கிழவி முறைத்துப் பார்த்தாள். நான் கண்டு கொள்ளாமல், பாயை விரித்து அதில் அமர்ந்தேன். நான் அமர்ந்திருக்கும் இருக்கும் இடம் தெரியாமல் அம்மா பாதையில் நின்று என்னை தேடினார்.

‘’கோமாளி வந்துட்டேன்.... கூத்து ஆட்டிட வந்துட்டேன்...

வாங்க வாங்க உட்காருக்காங்க... வ(ப)ந்த காலில் நீக்காதீங்க...

பாதையை விட்டு விலகி... பண்போடு, அன்போடு

உட்காருங்க... உட்காருங்க... உட்கா... ருங்க... 

அருமை உள்ள அம்மா மாரே... அய்யா மார்களே...

உங்க ஆடம்பர பேச்சுக்களை நிப்பாட்டுங்களேன்.... ‘’

என்று பப்பூன் வரவேற்று பாடி கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக நான் அமர்ந்திருக்கும் இடத்தை என் கை ஆசைவின் மூலம் தெரிந்து கொண்டு வந்தார் அம்மா.

உதட்டின் மீது இரு விரல்களை வைத்து புருட் புருட் வெற்றிலை எச்சிலை துப்பினால் அந்த கிழவி. அதன் சாரல் என் மீது தெறித்தது. அதை கண்டு கொள்ளாமல் நாடகம் பார்ப்பதில் கவனம் செலுத்தினேன்.

அம்மா, அக்கா, தங்கை, தம்பி என அனைவரும் அமர்ந்த பிறகு இடம் நெருக்கடியானது. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்திய மாதிரி, கொஞ்சம் இடம் கொடுத்த அந்த கிழவி, எங்கள் நெருக்கடியால் சுதந்திரமாக அமர்ந்து எச்சிலை துப்ப முடியாமல் அவதிப்பட்டார். அதை அவளது முணுமுணுப்பின் மூலம் தெரிந்து கொண்டேன்.

ஆனால், எங்க அம்மாவுக்கு அது கோபத்தை ஏற்படுத்தி விட்டது. சாதி தராதரம் தெரியாமல், அவள் முறைக்கும் நிலைக்கு வந்து இடம் பிடித்தானே என்று என் மீது ஆத்திரத்தை காட்டினார்.

சாதி, மத வேறுபாடுகளை மறந்து மக்களை இணைப்பது கலை.

நாடகம் நடக்கும் இடமாகட்டும், திரையரங்கு ஆகட்டும் அங்கெல்லாம் சாதியை மறந்து மக்கள் மக்களாக அமர்ந்து ரசிக்கிறார்கள். அப்படி மனதை மகிழ்ச்சியாக ஆக்கி செல்ல வைக்கிறது கலை.
 
குறவர் குலத்தைச் சேர்ந்த வள்ளியை காதலித்து கரம் பிடிக்கிறார் முருக கடவுள். அப்படிப்பட்ட நாடகத்தை கொட்ட கொட்ட கண் விழித்து விடிய விடிய ரசித்து பாராட்டி மகிழும் இவர்கள், நிஜ வாழ்க்கையில் மட்டும் சாதிப் பார்ப்பது ஏனோ என்று தெரியவில்லை.

பழையவர்கள் பழையவர்கள்தான். புதியவர்கள் புதியவர்கள்தான். எனது அம்மா பழையவர். சாதிப் பற்று அதிகம் உள்ளவர். அதனால் அனைவருடன் சேர்ந்து அமர்வது அவருக்கு பிடிக்காத ஒன்று.

நாடகம் பார்த்து திரும்பியதும் அனைவரையும் குளிக்க வைத்து, அமர்ந்திருந்த பாய் முதற்கொண்டு கழுவி, தீட்டை குளத்தில் விட்டு சென்றால்தான் அவருக்கு நிம்மதியே வரும்.

அப்படி இருக்கும் போது இப்படி முறைத்துக் கொண்டு ஏன் நாடகம் பார்க்க வேண்டும்?.

பப்பூன் வரவேற்று பாடி சென்ற பிறகு, அவருக்கு ஜோடியாக நடிக்கும் பெண்மணி வந்து ஆடினார். பாட்டும், ஆட்டமும், அவர் பாவாடை வட்டமாக சுற்றுவதையும் பார்த்து ஆண்கள் கூட்டம் குஷியில் கை தட்டி ரசித்தது.

எனக்கு எதிரே அமர்ந்திருந்த பெண்மணி, அவளுக்கு எதிரே மெய் மறந்து நாடகம் பார்த்த இரு பெண்களின் தாவணிகளை இணைத்து முடிச்சு  போட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் அதை கவனிக்காமல் நாடகத்தில் ஒன்றிப் போய் இருந்தார்கள். தலைமுடியில் கட்டிய ரிப்பனையும் கூட இணைத்தாள் அவள்.

பப்பூன் வேடம் போட்ட முஸ்தபாவும், அவருக்கு ஜோடியாக நடிப்பவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தி பேசிக் கொண்டார்கள். அந்த காட்சிகள் நகைச்சுவையாக இருந்தது. 

உனக்கு எந்த ஊரு?

புதுக்கோட்டை

எனக்கும்தான்.

புதுக்கோட்டையில் எந்த இடம்?

எனக்கு மேல ரெண்டாவது ...... வீதி

எனக்கு கீழே மூணாவது.... வீதி

இப்படி அவர்கள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனம் பேசும் போது, ஆண்கள் பகுதியில் குபீர் சிரிப்பு. அந்த சிரிப்பு அலைகள் அடங்க வெகு நேரமானது.

ராஜ்பார்ட் வந்து ‘’சங்கீத மீனா தரத்தின் மதியே’’ என்று பாட துவங்கிய போது மேடைக்கு எதிரே இருக்கும் இளைஞர் கூட்டம் டீ குடிக்கவும், தம் அடிக்கவும் எழுந்தார்கள்.

அம்மா சொல்லியும் கேட்காமல் அங்கு சென்று மேடைக்கு எதிரே இடம் பிடித்து அமர்ந்து கொண்டேன்.

பந்தல் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த ஒரு குண்டன், தூக்கம் சொக்கவே சிறிது நேரத்தில் குறட்டை விட ஆரம்பித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனுக்கு அது பிடிக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த அவன், பிறகு தனது சட்டைப் பையில் இருந்த மூக்கு பொடி டப்பாவை எடுத்து, இடது கை ஆட்காட்டி விரலில் பொடியை கொட்டி, அந்த விரலை அவர் மூக்கு எதிரே நீட்டினான்.

அவர் மூச்சு இழுத்த போது, பொடி மூக்கு வழியே தலைக்கு ஏறியது. அதன் பிறகு, அவர் காச்சு மூச்சு தும்மினார். பிறகு கோபத்தில் கொதித்தவர் அங்கும் இங்கும் பார்த்தார்.

யார் இப்படி செய்திருப்பார் என்று அவருக்கு தெரியவில்லை. என்னை பார்த்து ‘’நீயா’’ என்பது போல கேட்டார். நான் இல்லை என்றேன். ஒவ்வொருவரையாக பார்த்து வந்தவர், கண்டுகொள்ளாமல் நாடகத்தை பார்த்த அந்த இளைஞனை கவனித்தார். பையில் இருந்த பொடி டப்பா அவனை காட்டிக் கொடுத்துவிட்டது.

அவனை கொத்தாக பிடித்து நாலு சாத்து சாத்தினார். பதிலுக்கு அவனும் பளார் விட்டான். கட்டிக் கொண்டு இருவரும் புரள அந்த இடம் களேபரமானது. 

என்ன நடக்கிறது என்று தெரியால் சிலர் பீதியில் பேந்த பேந்த முழித்தனர். மேலே விழுந்து விடுவார்களோ என்கிற பயத்தில் சில ஆண்களும், பெண்களும் எழுந்து தெறித்து ஓடினார்கள். நாடகம் தடைப்பட்டது.

நாடக அமைப்பாளர்கள் பிரச்ச்னைக்குரிய அவர்களை பிரித்து அழைத்து சென்றனர். ஒலி பெருக்கியில் ஒருவர் கூட்டத்தை அமருமாறு அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார். என் அம்மா ஓடி வந்து என்னை பற்றிக் கொண்டு இழுத்து சென்றார்.

ஒரு வழியாக அமைதி திரும்பி மீண்டும் நாடகம் களை கட்ட ஆரம்பித்தது. ஆனால், அம்மா எங்களை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். நாடகம் பார்க்க முடியவில்லை. ஒரு ஜவ்வு மிட்டாய் கூட வாங்க முடியவில்லை என்று கத்தினேன்.

இந்த வருட திருவிழாவில் புல்லாங்குழல் ஒன்றும், பீபீ ஒன்றும் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். பூவரசம் இலையில் பீப்பி செய்து ஊதும் போதும், தென்ன ஓலையில் பீப்பி செய்து ஊதும் போதும் இந்த திருவிழாவில் புல்லாங்குழல் ஒன்று வாங்க வேண்டும் என்று பல மாதங்களாக கனவு கொண்டிருந்தேன். அதற்கு அந்த சண்டைக்கார்கள் சங்கு ஊதிவிட்டனர்.

விடிய விடிய நாடகம் நடைபெற்றது. ஸ்பீக்கரில் வசனங்களையும் இசையையும் கேட்டுக் கொண்டே இருந்தது மனம். நடுநடுவே நிதி உதவி செய்தவர்கள் பெயரையும் வாசித்தார்கள். அதில் அப்பா உதவிய தொகையும் வாசிக்கப்பட்டது.

அப்பாவும் அங்குதான் இருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. சித்திரவேலு ‘தத்து’ விழாவுக்கு சென்று விட்டு நாடகத்திற்கு வந்திருப்பார். நாங்கள் எங்கு அமர்ந்திருக்கிறோம் என்று தேடி பார்த்திருப்பார்.

சாதி பார்க்காமல் சித்திரவேலு விழாவுக்கு சென்றவர் அவர். என்னையும் அழைத்து செல்ல நினைத்தார். எனது வெம்பிய முகத்தைப் பார்த்த அவர், நாடகத்திற்கு செல்ல ஆசைப்படுகிறேன் என்று தெரிந்ததும் அனுப்பி வைத்தார்.

அப்படிப்பட்ட அப்பா, என் நாடகத்தையும் பார்த்து ரசித்தார்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...