Sunday, April 22, 2018

17 பெண் கொடுக்க மறுத்தார்கள்


ஜி.பாலன் 
என்னுடை தந்தை வழி உறவினர் வீட்டில் எனக்கு பெண் தருவதாக சொன்னார்கள். அதனால், எனக்கு திருமணம் செய்து வைத்து, ஆண் வாரிசு இல்லாத அந்த வீட்டுக்கு, என்னை வீட்டோடு மாப்பிள்ளையாக அனுப்ப முடிவு செய்திருந்தார், அண்ணன்.

சினிமா சினிமா என்று சுற்றுகிறானே? காலில் ஒரு கட்டு போட்டு உட்கார வைத்தால், குடும்பம், குடித்தனம் என்று சினிமா சிந்தனையில் இருந்து விடுபட்டு விடுவான் என்று எண்ணினார், அவர்.

கிராமத்திற்கு முதலில் சென்ற போதே இந்த திருமண பேச்சை ஆரம்பித்திருக்கிறார். இப்போதுதானே மாப்பிள்ளை வாந்திருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து பார்க்கலாம் என்று பதில் சொல்லி இருக்கிறார் பெண்ணின் தந்தை.

தம்பிக்கு சமோசா கம்பெனி ஆரம்பித்த போது, அந்த பெண்ணின் தந்தையை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, ’’எங்கேயும் சென்று விடாமல் இங்கேயே இருந்து தொழில் பாருங்கள்’’ என்று எனக்கு ஆலோசனை கூறினார்.

அந்த வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தங்கை திருமணத்தை முடித்துவிட்டு அதன் பிறகு எனது திருமணம் பெற்றி பேசலாம் என்று அண்ணனிடம் தெரிவித்திருந்தேன்.

மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்ததால், அவர்களுக்கு என் மீது நம்பிக்கை பறி போனது.

சினிமா சினிமா என்று அலையும் இவனுக்கு பெண் கொடுத்து, தனது பெண்ணுடைய வாழ்க்கையை கெடுத்துவிடக் கூடாது என்று முடிவு செய்தார்.

அதனால் எனது சித்தப்பா மகனுக்கு அந்த பெண்னை திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடந்திருக்கிறார்.

இந்த தகவல் எனது அண்ணன் காதுக்கு வந்த போது அதிர்ந்து போனார்.

மனம் மாறியதால் அவர்கள் மீது கோபமும், என் மீது கடும் ஆத்திரமும் கொண்டார்.

இது பற்றி எதுவும் தெரியாத நான், வழக்கம் போல பொங்கல் முடிந்ததும் சென்னைக்கு செல்ல தயாரானேன்.

நான் சென்னைக்கு செல்வதை தடுத்தார். ’’தங்கை திருமணம் முடிந்ததும், அதன் பிறகு உன் இஷ்டத்துக்கு எங்கு வேண்டுமானாலும் செல்’’ என்றார்.

சினிமாவுக்கு வெளியே நான்கு ஆண்டுகள் சுற்றிய போது தடுக்கவில்லை. இப்போது  மன்னன், அமரன், நாளைய செய்தி என பல படங்களுக்கு மக்கள் தொடர்பு உதவியாளராக வேலை செய்து வந்திருக்கிறேன். இப்போது தடுத்தால் எப்படி?. என் முயற்சியை தடுக்காதீர்கள் என்றேன்.

எப்படியும் சினிமா உலகில் இயக்குநர் ஆவேன். என் உழைப்புக்கு புகழும், பணமும் வந்து சேரும் என்கிற நம்பிக்கையை அவரிடம் கூறினேன்.

அவர் ஒத்துக் கொள்ளவில்லை. தங்கை திருமணத்தை காரணம் காட்டி தடுக்கவே செய்தார். உறவினர்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெந்தகத்திற்கு வைத்திருக்கும் நிலத்தை திருப்பி, தங்கைக்கு அதை எழுதி வைத்து சில்லறை நகைப் போட்டு திருமணம் செய்து கொடுத்துவிடாலம்  என்று, சமோசா கம்பெனி நடத்தும் திருச்சங்கோடு ஏரியாவில் ஒரு சீட்டு போட்டிருந்ததையும், அதை எடுத்து தங்கை திருமணத்தை  முடித்துவிடலாம் என்றும் தெரிவித்தேன்.

அப்படி என்றால் அதை முடித்துவிட்டு, சினிமா வேலைக்கு போ என்று பிடிவாதம் காட்டினார்.

அம்மா, தங்கை என எல்லோரும் அழுதனர். நான் திரும்பி வரமாட்டேன் என்கிற எண்ணம் அவர்கள் மனதில் அழுத்தமாக விழுந்திருக்கிறது.

அதனால், என்னுடைய முயற்சி அங்கு எடுபடவில்லை. 

என் சென்னை பயணம் அப்போது தள்ளி போனது

பெண் கொடுக்காத அவர்களுக்கு எதிரே, எனக்கு ஒரு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பது என்கிற முடிவில் இருந்திருக்கிறார், அண்ணன்.

தங்கை திருமணம், வீடு கட்டும் வேலை என இரு பெரிய சவால்கள் என் முன் இருந்தன.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...