Sunday, April 22, 2018

47 விழா நடத்த கிடைத்த அனுபவம்


கலைஞர் அவர்கள் திரைத்துறைக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆனதால், அவரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஒரு விழா நடத்த திரையுலகினர் முடிவு செய்தார்கள். விஜயகாந்த் தலைமையேற்று அந்த விழாவை சிறப்பாக நடத்த முயற்சி எடுத்தார்.

வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது என்பார்கள். அப்படி பேனாவுக்கு சொந்தக்காரரான கலைஞர் அவர்களுக்கு ஒரு பிரமாண்ட பேனா பரிசு அளிப்பது என்று முடிவுவானது. 

சென்னை கடற்கரையில் இருந்த சீரணி அரங்கில் விழா நடைபெற்றது. அவ்விழாவுக்கு நடிகர் நடிகைகளை காரின் மூலம் பிலிம் சேம்பர் வளாகத்திற்கு வரவழைத்து, அங்கிருந்து பஸ்கள் மூலம் சீரணி அரங்கிற்கு அழைத்து செல்வது என்றும், அது பாதுகாப்பாக இருக்கும் என்றும் முடிவானது.

இவ்விழாவுக்கும் டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பாளர்களான நாங்கள் பலர் வேலை செய்தோம். எனக்கு மேடையில் வேலை. நடிகர் நடிகைகளை தவிர, வேறு யாரையும் மேடை ஏற்றக் கூடாது என்று உத்தரவு.

மேடைக்கு எதிரே கலைஞர் அவர்களின் குடும்பத்தினர்,  இந்தப் பக்கம் தி.மு.க. அரசியல் பிரமுகர்கள், அந்தப் பக்கம் பத்திரிகையாளர்கள் என எல்லோரும் வசதியாக அமர்வதற்கு இடம் ஒதுக்கி, அந்த வேலைகளை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் செய்து கொடுத்திருந்தார்.

இவ்விழாவுக்கு நடிகர், நடிகைகள் குவிகிறார்கள் என்பதால், அலையலையாக மக்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. ஜன சமுத்திரத்திற்குள் பஸ்ஸில் இருந்து வந்து நட்சத்திரங்கள் இறங்கியதும், எங்கிருந்துதான் வந்ததோ ஒரு கூட்டம், தடுப்புகளை உடைத்து சாய்த்து மேடையை நோக்கி முன்னேறியது. இதனால், தள்லு முள்ளு, நெருக்கடி, என மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

நடிகர், நடிகைகளுடன் வந்த உதவியாளர் அல்லது பெற்றோர்கள் நிற்க இடம் கிடைக்காமல் மேடை ஏற முயன்றனர். அவர்களை எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த், ’’சரி விடு... அவர்கள் எங்கு நிற்பார்கள்’’ என்றார்.

நான் அவர்களையும் மேடை ஏற வழிவிட்டேன். கூட்டத்தினரை மைக்கின் மூலம் அமைதிப் படுத்திக் கொண்டிருந்த தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்,  மேடை ஏறுபவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஓடிவந்து ’’என்ன பாலா இப்படி பண்ணிட்டே’’?  ’’என்று சத்தம் போட்டார்.

கேப்டன் விடச் சொன்னார் என்று பதில் கூறியதும், அமைதியானார்.

எந்த வித அசம்பாவிதமும் பெரிதாக இல்லாமல், விழா நடந்து முடிந்தது. அந்த விழா மூலம் பாதுகாப்புடன் எப்படி விழா நடத்த வேண்டும் என்கிற அனுபவத்தை கற்றுக் கொண்டேன்.

1996 ஆம் ஆண்டு மத்திய ஒலிபரப்புதுறை மந்திரியாக ஜெயபால் ரெட்டி பதவி ஏற்ற போது, அவருக்கு தமிழ்த் திரைபடத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்தி கௌரவித்தார் கே.ஆர்.ஜி. சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த அவ்விழாவுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அந்த விழாவுக்கு அழைப்பிதல் அனுப்பியது முதல், விழா முடியும் வரையிலான அனைத்து வேலைகளையும் தலைவர் கே.ஆர்.ஜி. செயலாளர் கே.விஜயகுமார் ஆகியோரின் வழி காட்டுதலில் நான் செய்து முடித்தேன். அதில் எனக்கு பாராட்டு கிடைத்தது.

அதன் பிறகு திரையுலகில் நடைபெற்ற பல விழாக்களில் நானும் விழா அமைப்பாளராக இருந்து செயல்பட்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை  இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...