Sunday, April 22, 2018

43 தயாரிப்பாளர் சங்கமும், அறக்கட்டளை துவக்கமும்


ஆரம்பத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய வருமானம் எதுவும் கிடையாது. உறுப்பினர் சந்தா, மற்றும் படபெயர் பதிவு செய்தல் போன்ற வேலைகளுக்காக சிறிய தொகை மட்டுமே வசூல் ஆனது. அதை வைத்துக் கொண்டு வாடகை, சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை இருந்தது.

செயற்குழு கூட்டம் நடத்தினால், வருகிற உறுப்பினர்களுக்கு காப்பி வாங்கி கொடுக்க கூட முடியாத நிலை. இதை புரிந்து கொண்டு, ஒரு கூட்டத்திற்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இன்னொரு கூட்டத்திற்கு ஜெயின்ராஜ் ஜெயின், மற்றொரு கூட்டத்திற்கு நந்தகோபால் செட்டியார் என சில தயாரிப்பாளர்கள் அந்த செலவுக்கான பணத்தை கொடுத்து உதவினார்கள்.

இப்படி இயங்கிக் கொண்டிருந்த சங்கம், வருகிற உறுப்பினர்களுக்கெல்லாம் காபி வாங்கி கொடுக்கிற நிலைக்கு உயர்ந்தது. அதற்கு தலைவராக இருந்த கே.ஆர்.ஜி.யும், அவருடைய நிர்வாக குழு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருந்தான. 

தயாரிப்பாளர்களிடம் இருந்து பாடல்கள் பெற்று சன் தொலைக்காட்சி, ஜேஜே டிவி, கோல்டன் ஈகில் கம்யூனிக்கேஷன், ஜெயின் டிவி, துரதர்ஷன் இரண்டாவது சேனலில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் முக்காபாலா, சித்ரகார், ரங்கோலி, என பல நிகழ்ச்சிகளில் பாடல்கள் ஒளிபரப்ப கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு குறைந்த பட்சம் நான்கு லட்சம் வரை வருமானத்தைப் பெற்று தந்ததோடு, அந்த சர்வீஸ் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வருமானத்தையும் பெருக்கியது. தினமும் வங்கி செயல்படுவது போல சங்கத்தில் இருந்து உறுப்பினர்களுக்கு காசோலைகள் சென்று கொண்டிருந்தன.

மேனேஜர் சீனிவாசன், நிர்வாகி சுப்பாராவ், மக்கள் தொடர்பாளராக்கிய  நான், ஆபீஸ் பையன் முருகன் ஆகியோர் மட்டுமே ஆரம்பத்தில் வேலையில் இருந்தோம். காலை ஒன்பது மணி முதல் இரவு பத்து மணி வரை நேரம் காலம் பார்க்காமல் வேலைப் பார்த்தோம்.

வருமானம் லட்சத்தை கடந்து அரை கோடியை தொட்டபோது லட்சியத்தை அடைய ஆரம்பித்தார் தலைவர் கே.ஆர்.ஜி. தயாரிப்பாளர்களுக்கு உதவ அறக்கட்டளை அமைப்பை தொடங்க வேண்டும் என்பது கே.ஆர்.ஜி.யின் லட்சியம். அந்த கனவை நனவாக்கியது தயாரிப்பாளர் கோவிந்த் அவர்களின் மரணம்.

வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சத்யராஜை முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க வைத்தவர் ‘சாவி’ படத்தின் தயாரிப்பாளர் கோவிந்த். அவர் ஒரு நாள் மாலை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தார். நண்பரானா செயலாளர் டி.என்.ஜானகிராமானிடம் வெகு நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என மார்பு வலி வந்தது. அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் ஜானகிராமன்.

மறுநாள் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி கிடைத்தது. இதை அறிந்து தலைவர் கே.ஆர்.ஜி. அதிர்ச்சி அடைந்தார். பிறகு கோவிந்த் அவர்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று செயலாளர் ஜானகிராமன் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, அந்த உதவி தொகையை தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் அறக்கட்டளை துவக்கி வைத்து உதவினார்.

பிலிம் சேம்பர் திரையரங்கில் நடந்த அந்த பொதுக் குழு கூட்டதிற்கு  பெரும் திரளாக தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ்,தன் பங்குக்கு ஒரு லட்ச ரூபாய் உதவினார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையின் அறங்காவளாராக திரு.கே.ஆர்.ஜி., திரு.கேயார், திரு.டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் பொதுக் குழுவால் தேர்வானார்கள்.

அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றார் காந்திஜி. அவருக்கு துணையாக இருந்தார் நெருஜி. அதே போல எங்கள் தயாரிப்பாளரின் சுதந்திரதிற்காக பாடு பாடுகிறார் கே.ஆர்.ஜி.

உரிமை பெற செக் இழுத்து கஷ்டப்பட்டார் வ.உ.சி. அதே போல எனக்கு செக் வாங்க கஷ்டப்பட்டார் கே.ஆர்.ஜி என்று பேசி, கைதட்டல்களை பெற்றார் எஸ்.எஸ்.சந்திரன்.

எஸ்.எஸ்.சந்திரன், தன் நண்பரோடு இணைந்து ‘புருஷன் எனக்கு அரசன்’ என்கிற படத்தை தயாரித்திருந்தார். படம் வெளியாகும் போது இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு வழங்கிய மானிய தொகையை பெறும் போது, இருவருக்கும் இடையே யார் அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் என்று மோதல் வெடித்தது. கடிதங்கள் அரசுக்கு அனுப்பட்டன. அதனால் அப்படத்திற்கு செல்ல வேண்டிய காசோலையை நிறுத்தி வைக்கப்பட்டது.

அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. எஸ்.எஸ்.சந்திரன், திமுக கட்சியில் இருந்தார். அதனால் கே.ஆர்.ஜி.அவர்களிடம் பிரச்சனையை சொன்னார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் வேறொரு அமைச்சர் மூலமாக பேசி அந்த தொகையை பெற்றுதந்திருந்தார் கே.ஆர்.ஜி.

அந்த நன்றிக்காக அப்படி புகழ்ந்து பேசினார் எஸ்.எஸ்.சந்திரன்.

அன்று ஒரு செடி போல துவங்கிய தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை இன்று ஆலமரம் போல வளர்ந்து, தனது உறுப்பினர்களின் நல் வாழ்க்கைக்கு உதவி உயர்ந்து நிற்கிறது.

திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் மறைந்தாலும் அவரது ஆசை, லட்சியம் இப்பவும் தொடர்கிறது.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...