Sunday, April 22, 2018

1 நான் திரையுலகை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?


G.BALAN
காலம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம்தான் அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

பணம் தேடவும், புகழ் தேடவும் நடக்கும் இந்த போராட்டத்தில் வெற்றி என்பது என்ன என்று தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் இந்த போராட்டத்தில் நாம் நினைத்தை அடைய நிறைய இழந்திருக்கிறோம் என்பதை மட்டும் உணர முடிகிறது.

ஆனால், பிடித்த விஷயத்திற்காக அதை தேடி ஓடிய அந்த போராட்டத்தில் மனம் நிறைய எதிர்ப்பார்ப்பும், நிம்மதியும் நிறைய இருந்திருக்கிறது. அதை அனுபவித்திருக்கிறேன். அதற்காக குடும்பத்தினரையும் என்னை நம்பி இருப்பவர்களையும் கஷ்டப்பட வைத்திருக்கிறேன்.

சரி. நான் திரையுலகை தேர்ந்தெடுக்க, என்ன காரணம் என்று நினைத்துப் பார்க்கிறேன். கலையுலகம் கலையில் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமே தேடிப் பிடித்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். நான் கலைஞானா? என்று நினைத்தால், அதற்கு பதில் தெரியவில்லை.

என்னுடைய சிறு வயதில் என் வயதொத்த சிறுவர் சிறுமிகளுடன் ஓடி பிடித்து விளையாடி இருக்கிறேன். தந்தி மர லைட் வெளிச்சத்தில் ஒளிந்து பிடித்து விளையாடி இருக்கிறேன். 

திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும் போது எங்களுக்குள் சண்டை வந்து விடும். விளையாடும் போது அழுவு‌னி‌ ஆட்‌டம்‌ ஆடி‌னால் அவர்கள் மீது எனக்கு கோபம் வரும். அதனால் அவர்களை சில சமயம் அடித்து இருக்கிறேன். அவர்கள் திருந்தும் வரை விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேன். விளையாட்டில் ஆர்வமும் நேர்மையும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் நான்.

நாங்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து எங்கள் கடைக்காரர் தாத்தா அமைதிப் படுத்த ‘கதை’ சொல்வார். கதை என்றதும் முதல் ஆளாக அவர் அருகில் சென்று அமர்ந்து ஆர்வத்துடன் கதை கேட்பேன். முருகேசன், பழனி, கடைசி வீட்டு தம்பி, கலையரசி, புஷ்பவள்ளி, ஜெயந்தி, தலையாரி வீட்டு  சின்ன பாப்பா, என எல்லோரும் அவரைச் சுற்றி வட்டாமாக அமர்ந்து கதை கேட்போம்.

ராஜாராணி கதை, மந்திரி கதை, பேய் கதை, கள்ள புருஷன் கதை என பல கதைகளை எங்களுக்கு அவர் சொல்வார். அதில் சஸ்பென்ஸ், த்ரில், நகைச்சுவை என எல்லாம் கலந்து இருக்கும். நாங்கள் ரசித்து சிரித்து கேட்போம். சில நாட்களில் விடுகதை போடுவார். பதில் சொல்வதில் போட்டி ஏற்படும். அதைப் பார்த்து அவர் ரசிப்பார். இப்படி எங்களுக்கு கதை சொல்லி ரசிக்க வைத்த எங்கள் கடைக்காரர் தாத்தா எனக்கு இப்போது கலைஞனாக தெரிகிறார்.

வீட்டுக்கு வந்து படுத்த பிறகும் அவர் சொன்ன கதை மனதில் படமாக ஓடும். கதையை எப்படியெல்லாம் சஸ்பென்ஸ் வைத்து சொல்கிறார் என்று நினைத்து பார்ப்பேன். அவர் கதை சொன்ன விதம், வசனம் என அனைத்தையும் நினைத்து ஆசைபோடுவேன்.

மறுநாள் பள்ளி இடைவேளையின் போது சக மாணவர்களிடம் அவர் சொன்ன கதையை அப்படியே சொல்வேன். அவர்கள் ஆசையோடு கேட்பார்கள். அந்த அனுபவம் மகிழ்ச்சியை தந்தது.

சக மாணவ, மாணவிகள் என்னிடம் தினமும் கதை கேட்க ஆர்வமாக இருந்தார்கள். வீட்டுக்குள் இருந்து கொண்டு வெளியே வரமுடியாமல் இருக்கும் ‘வயதுக்கு வந்த பெண்கள்’ கூட என்னை வரவழைத்து கதை கேட்பார்கள்.

‘’பாலு கதை சொன்னால் கேட்டுக்கிட்டே இருக்கலாம்’’ என்று அவர்கள் சொன்னது, இப்போது என் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இப்படித்தான் எனக்குள் கதை சொல்லும் திறன் வளர்ந்தது என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...