Sunday, August 23, 2015

42. தயாரிப்பாளரின் கோபமும், தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரமும் – ஜி. பாலன்

ஜி. பாலன் 
அந்த காலகட்டத்தில் திரைப் படங்கள் அவுட் ரைட், அல்லது எம்.ஜி. முறையில் திரையிடப்பட்டன. அதற்கு எந்தப் பிரச்சனையும் பெரிதாக இருந்ததில்லை. ஆனால், விநியோக முறையில் திரையிடப்பட்ட படங்களுக்கு பெரும் பிரச்சனை இருந்தது.

தயாரிப்பாளரின் முந்தையப் படம் பற்றிய வரவு செலவு கணக்குகளை உடனுக்கு உடனே தீர்த்து கொள்ளாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள், அடுத்தப் படத்தின் வெளியீட்டின் போது வினியோகஸ்தரின் பழைய பாக்கியை செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

பாக்கி தொகையை படம் துவங்கும் போது சொல்லமாட்டார்கள். படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகும் போது தெரிவிப்பார்கள். அதனால், ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்திற்கும் கடைசி நேரத்தில் நேரில் சென்று பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு இருந்தது. இல்லை என்றால், அந்தப் படத்திற்கு ரெட் என்கிற தடை நடைமுறையில் இருந்தது.'

படம் பெற தியேட்டர் அதிபர்களும், படம் வெளியிட தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தகளை நம்பியே இருந்தனர். அதனால், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கங்கள் ஒவ்வொரு சினிமா மாவட்டத்திலும் வலிமையாக இருந்தன.

தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்க படத் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர வேண்டும். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கும் என்று தெரிவித்தார் தலைவர் கே.ஆர்.ஜி.

அதே போல, ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பி, தமிழ்ப் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவே பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

உண்மையாக சொல்வதென்றால் பணம் போட்டு படம் தயாரிக்கும் படத் தயாரிப்பாளர்களுக்கு மரியாதைக் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூப்பிட்டு அவர்களை அடிக்காதீர்கள் என்கிற மாதிரியான வேண்டுகோள், அது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலிமை பெறுவதற்கு முன் அப்படிபட்ட நிலை தாயாரிப்பாளர்களுக்கு இருந்தது என்பதை கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

வேறு ஒருவருக்கு படத்தை விற்றதால், முன்பு படம் வாங்கிய விநியோகஸ்தர்,  மதியம் இரண்டு மணிக்கு ஒரு தயாரிப்பாளரை அவரது அலுவலகத்தில் துணைக்கு வந்த ஆட்களை வைத்துக் கொண்டு அடித்திருக்கிறார். அவர் சங்கத்திற்கு அழுது கொண்டு போன் செய்ததும், உடனடியாக நான் தலைவர் கே.ஆர்.ஜி. கவனத்திற்கு கொண்டு செல்ல, அவர் அதிரடியாக இறங்கி நடவடிக்கை எடுத்தார். அதே போல நிதி உதவி செய்தவர்கள் மிரட்டல், அடி, உதைகள் என பல துன்பங்களை பல தயாரிப்பாளர்கள், அனுபவித்திருக்கிறார்கள்.

நடிக்க முன் பணம் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காத சில நடிகர், நடிகைகளால் தயாரிப்பாளர்கள் கஷ்டத்திற்கு ஆளானார்கள். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவியாக அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று கருதினார் கே.ஆர்.ஜி.

பல வெற்றிப் படங்களை தயாரித்த ஒரு தயாரிப்பாளர் இறந்த போது, அவரது இறுதி காரியத்திற்கு செலவுக்கு பணம் இல்லாமல் இருந்ததை நேரில் கண்டு வேதனைப்பட்டிருக்கிறார். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் இருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நூற்றி எழுபது உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அதில் சில உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் கூட இருந்தனர். அதனால், உறுப்பினர் ஆகாமல் வெளியே தமிழ்ப் படம் எடுக்கும் அனைத்து தயாரிப்பாளர்களையும் சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று என்னை தினமும் விரட்டினார்.

ஆயிரம் ரூபாய் நன்கொடை, இரு நூறு ரூபாய் ஆண்டு சந்தா, நூறு ரூபாய் நுழைவு கட்டணம் என ஆயிரத்து முன்னூறு ரூபாயில் உறுப்பினர் சேர்க்கை இருந்தது. விண்ணப்ப படிவங்களை கையில் வைத்துக் கொண்டு, படத் துவக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, பட அலுவலகங்கள் என்று நேரம் காலம் பார்க்காமல் ஓடினேன்.

சிலர் சேர்ந்து கொண்டானர். சிலர் விவாதித்தனர். சிலர் கிண்டல் செய்தனர். சிலர் ஏளனம் செய்தனர். சிலர் ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்காக பல முறை அலையவிட்டனார். முயற்சிகள் வெற்றி பெரும் என்கிற ஒரே இலக்கோடு ஓடு ஓடு என்றார் விரட்டினார் கே.ஆர்.ஜி.

ஒரு நாள் மதியமே திரும்பி வந்துவிட்டேன்.  ‘’என்ன பாலா... இன்னைக்கு எத்தனைப் பேரைப் பார்த்தே?... ‘’ என்று கேட்டார்,

நான் ஒரு தயாரிப்பாளரிடம் டோஸ் வாங்கி வந்த தகவலைச் சொன்னதும், அதிர்ந்து போனார்.

தயாரிப்பாளர் சங்கம் ஒரு லெட்டர் பேடு சங்கம். அங்கு உறுப்பினராகி என்ன பயன்? படத்திற்கு பெயர் வைத்து பதிவு செய்து சென்சார் கிளியரன்ஸ் பெறுவது என்றால் கூட, பிலிம் சேம்பருக்கோ, கில்டு அமைப்புக்கோதான் செல்ல வேண்டும். அதனால் அவர்களை பகைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் ஏன் உறுப்பினராக வேண்டும் என்பதை கடுமையான வார்த்தைகளால் அந்தத் தயாரிப்பாளர் அர்ச்சனை செய்திருந்தார். அதை அப்படியே சொன்னேன்.

அந்தத் தயாரிப்பாளர் கேட்பதில் நியாயம் இருப்பதை உணர்ந்த தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள், உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டி, அதற்கு தீர்வுகான முயன்றார்.

மூத்த உறுப்பினர் திரு.முக்தா சீனிவாசன் அவர்களை சங்க செலவில் டில்லிக்கு அனுப்பி வைத்து, மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சகத்தில் பேச வைத்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக வரும் பதிவு செய்த படப் பெயர் கடிதம், மற்றும் பப்ளிசிட்டி கிளியரன்ஸ் சான்றிதழ் பெற்றுக் கொண்டு படங்களை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் படி மத்திய தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட காரணமாக இருந்தார்.

இந்த உரிமைக்கான முயற்சியும், வெற்றியும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெரிய அங்கீகாரமாக இருந்தது. இதை எதிர்பாராத மற்ற அமைப்புகள் ஆடித்தான் போயின.

தயாரிப்பாளர் சங்கத்தில் வேலைக்கு சேர்ந்த அன்று என் மகன் பிறந்தான். அதனால் அன்றே விடுமுறை கேட்க நான் விரும்பவில்லை. உதவி இயக்குநராக ஆர்.கே.செல்வமணியிடம் சேர வேண்டும் என்று நினைத்த நான், மகன் பிறந்து விட்டான். வருமானம் வேண்டும் என்று உதவி இயக்குநர் எண்ணத்திற்கு அப்போது மூட்டைக் கட்டி வைத்தேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நான் கேட்காமலே வேலை கிடைத்திருக்கிறது. அதனால், இப்போது வேலையைப் ஒழுங்காக பார்ப்போம், என்று முடிவு செய்தேன்.

முப்பதாவது நாள் என் மகனுக்கு பெயர் வைக்க முடிவு செய்திருந்தார் அண்ணன் சண்முகம். இப்போதாவது மகனைப் பார்க்க வருவியா என்று கோபப்பட்டார்.

(என் திரையுலக வாழ்க்கை அனுபவங்கள் தொடரும்)


No comments:

Post a Comment

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...