Sunday, April 22, 2018

4 எமதர்மன் கொடுத்த தண்டனை


Director SP. Muthuraman, G.Balan
ஒவ்வொரு முறையும் நாடகம் பார்த்துவிட்டு திரும்பும் போதும் அந்த நாடக காட்சிகள் மனதில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து ஞாபகத்திற்கு படுத்திக்கொண்டே இருந்தன. அதே போல நாமும் நடித்துப் பார்ப்போமே என்று அந்த வசனங்களை பேசிப் பார்த்தேன். தப்பு தப்பாக வசனங்கள் இருந்தாலும் அதை பேசிப் பார்ப்பேன். கதை முழுவதும் மனதில் இருப்பதால், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நடிகர்களும் என்ன பேசி இருந்தார்கள் என்று ஒரு குத்து மதிப்பாக வசனங்களை சுயமாக போட்டு பேசிப் பார்த்தேன்.

நான் மட்டுமே இயங்க முடியாது என்பதால், என்னுடைய விளையாட்டு தோழர், தோழிகளை அழைத்து, நீதான் வள்ளி, நீதான் கணேசன், நீதான் வள்ளியின் தோழி, நீதான் பப்பூன் என்று ஒவ்வொருவருக்கும் கதாப்பாத்திரங்களை ஒதுக்கி வசனம் பேசிப் பழக்குவேன். ஒருவனை தகர டின், சப்பாட்டு தட்டுக்கள், வெண்கல பாத்திரங்கள் கொண்டு அதில் கனமான குச்சியால் அடித்து ஒலி எழுப்ப வைத்து இசையமைக்க வைப்பேன்.

இதெல்லாம் என்னுடைய ஏழு வயதில் நடந்த சம்பவங்கள். சிலருக்கு அதில் ஆர்வம் இருந்ததில்லை. இருந்தாலும் நான் விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்பதால், பயந்து ஒத்துழைப்பார்கள்.

அட்டைகளில் கிரீடம், வேல், யானை தும்ம்பிக்கை, வீட்டில் உள்ள சேலை, பாவடை, தாவணி, வேஷ்டி, கண்ணாடி, சீப்பு, பூசரமாவு என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். கோடைகாலத்தில் வாய்க்கல்தான் எங்களுக்கு விளையாட சவுகரியமான இடம். வாய்க்காலின் இரு கரையை இணைத்து திரைகட்டி, ஒரு பக்கம் நடிகர்களும், இன்னொரு பக்கம்  வேடிக்கைப் பார்ப்பவர்களுமாக பிரித்து வைத்து எங்கள் நாடகம் அரங்கேறும்.

அப்படி ஆட்டம், பாட்டத்துடன் எங்கள் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த எனது அப்பா, எங்கள் நாடகத்தை பார்த்திருக்கிறார். அருகே வந்தால், நாங்கள் களைந்து சென்று விடுவோம் என்று யோசித்தவர், துரத்தில் மதகு மீது மறைவாக அமர்ந்து எங்கள் குரலையும் ஆட்டத்தையும் ரசித்திருக்கிறார்.

g.balan
நாடகத்தின் போது குரலை ஏத்தி இறக்கி அந்த மாடுலேசனோடு பாடுவதையும், பேசுவதையும் கேட்டு ரசித்திருக்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தை தவறாக பேசுபவர்களை நான் கண்டிப்பதையும் அவர் கேட்டிருக்கிறார். பிறகு வேறு வழியே வீட்டுக்கு சென்றவர், என்னுடைய நாடக ஆர்வத்தை நினைத்து சிரித்திருக்கிறார்.

நாங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடகம் போடுவோம். பயன் படுத்தாமல் கிடக்கும் பழைய வீடு, மாட்டுக் கொட்டகை, செடியும் முள்ளும் மண்டி கிடக்கிற மறைவான திடல்கள் என எங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் நாடகம் அரங்கேறும்.

புராண நாடகம் மட்டுமில்லாது, பாடப் புத்தகத்தில் வந்திருக்கும் தெய்வம் நேரில் வந்து தங்க கோடாலி கொடுத்த கதை, கடைகாரர் தாத்தா சொன்ன ஏமாளி அக்காவை சுரண்டி ஏமாற்றும் தங்கையின் கதை என பல கதைகளை நாடகமாக அரங்கேற்றி பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க வைத்திருக்கிறோம்.

ஒரு முறை நடிக்க வேண்டிய ஒரு பெண் வராததால், நான் பாவடை ஜாக்கெட் அணிந்து நடித்துக் கொண்டிருந்த போது, கோவில் காளை அவ்வழியே வர, வேடிக்கைப் பார்த்தவர்களும், நடித்தவர்களும் நாலாப் பக்கமும் தெறித்து ஓட, நான் பாவாடையோடு வயலில் ஓடி, மரத்தில் ஏறியதை தெரு ஜனமே வேடிக்கைப் பார்த்திருக்கிறது.

சிலர் இப்பவும் அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தி பேசுகிறார்கள். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்.

ஒரு முறை எங்கள் ஊர் கோவில் திருவிழாவின் போது நாடகம் போட்டார்கள். நாடக கொட்டகை கட்ட ஆரம்பித்த நாள் முதல், நாடகம் முடிந்து நடிகர்கள் செல்லும் வரை அந்த இடம் தான் எனக்கு விருப்பமான இடமானது.

நடிகர், நடிகைகளின், உடைகள், அணிகலன்கள், மேக்கப், என எல்லாவற்றையும் நேரில் பார்த்து அசந்து போனேன். அதையெல்லாம் எங்கு வாங்குவது என்று அவர்களை கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு உதவியாக இருந்ததால், என்னிடம் அன்பு காட்டினார்கள். அனுசரணையாக பேசினார்கள்.

இரண்டாவது நாள் ‘சத்தியவான் சாவித்திரி’ நாடகம் நடந்த போது, சித்திரக் குப்தன் ஒலைசுவடியைப் பார்த்து தவறு செய்தவர்களை வரிசையாக பட்டியலிட, எமதர்மராஜா தண்டனை வழங்கும் காட்சி நடைபெற்றது. அந்தக் காட்சியில் நீ நடிக்க வேண்டும் என்று என்னை தள்ளிவிட்டார்கள்.

தலையில் கொம்பு முளைத்த இரண்டு கருத்த தடியன்கள் என்னை இழுத்து சென்று எமதர்மன் முன் நிறுத்த, முரட்டு மீசையும், மிரட்டும் பார்வையும் கொண்ட எமதர்மன், என்னைப் பார்த்து ‘’இவன் என்ன செய்தான் என்று?’’ கத்தி களேபரம் செய்து கேட்க, சித்திரக் குப்தன் ஓலைச்சுவடியைப் புரட்டி பார்த்து, ‘’பெற்ற தாயை காலால் எட்டி உதைத்தவன்’’ என்று பதில் சொல்ல, எமதர்மனுக்கு கோபம் வந்து பாட்டுப் பாடி, ‘’இவனை  கொதிக்கும் எண்ணையில் போட்டு வறுத்தெடு’’ என்று தண்டனை கொடுக்கிறார்.

அந்தக் காட்சியில் பயந்து அஞ்சி நடுங்கிய என் முகத்தை பார்த்த ஒரு நடிகர், பேசாமல் எங்களுடன்  புதுக்கோட்டை வந்துவிடு, நாடகத்தில் நடிக்கலாம் என்றார்.

மூன்று நாள் நாடகத்தை வெற்றிகரமாக முடித்து நாடக் குழு, விடைபெற்று கிளம்பும் போது, எனக்கு அவர்களை பிரிய மனமில்லை. ஆண்களும், பெண்களும் என்னை தட்டிக் கொடுத்தும், முத்தமிட்டு கொஞ்சியும் சென்றார்கள்.

ஆட்டம் காலி படுதா மிச்சம் என்பது போல, நாடக கொட்டகையின் ஸ்கிரீன் செட்டுகள், மட்டுமே இருந்தது. அதையும் மூட்டைக் கட்ட வேண்டியவர்கள் வந்தார்கள்.

அதுக்கு மேல அங்கிருக்க மனமில்லை. அடுத்த ஆண்டு திருவிழாவில்தான் அவர்களை காண முடியும் என்கிற வேதனை சுமையோடு வீட்டை நோக்கி நடந்தேன்.

5 பார வண்டியில் படம் பார்க்க சென்றது


ஜி.பாலன் 
எனது வடசங்கந்தி கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இடையூர். சிறிய கடைத் தெருவுடன் கூடிய அந்த ஊரில் ‘சரவணா டாக்கீஸ்’ என்கிற திரையரங்கு இருந்தது.

சினிமாவை ஏ,பி,சி, என மூன்று சென்டர்களாக பிரிப்பார்கள். அதில் மூன்றாவது சென்டர் திரையரங்கு அது. எங்களது மாவட்டம் எப்படி கடைமடை பகுதியோ?, அதேபோல பிரிண்ட் தேய்ந்து கடைசியாக, எங்களுக்கு படம் வரும். படம் ஓடும் போது மழை மாதிரி தேய்மானம் தெரிந்தாலும், அவர்கள் புத்தம் புதிய பாலியஸ்டர் பிரிண்ட் என்று போஸ்டரில் போடுவதை மறக்க மாட்டார்கள்.

வாரம் தோறும் ஒரு படம் திரையிடுவார்கள். தினமும் மாலை, இரவு என இரண்டு காட்சிகள் திரையிடுவார்கள். எல்லாம் பழைய படங்கள்தான். பெஞ்சு டிக்கெட் அறுபது காசு. தரை டிக்கெட் நாற்பது காசு.

பெஞ்சு என்று அங்கு இருந்ததில்லை. சவுக்கு கம்பில் கால்கள் வைத்து பலகையை அதன் மீது வைத்து ஆணியால் அடித்து வைத்திருப்பார்கள். அதுதான் பெஞ்சு.

தரை டிக்கெட்டுக்கு மண்ணில் தான் அமரவேண்டும்.  கீற்று கொட்டகை என்பதால், பொங்கல், தீபாவளி காலங்களில் மட்டும் மேட்னி ஷோ போடுவார்கள். வெளிச்சம் ஊடுருவாமல் இருக்க தார் பாய் விஷேசமாக கட்டி தொங்க விட்டிருப்பார்கள். நான்கு ரீல்கள் வீதம் திரையிடுவதால், மூன்று இடைவேளை விடுவார்கள். சில நாட்களில் மின்சாரம் தடைப்பட்டால் அது வரும் வரை காத்திருக்க வேண்டும்.

திரைக்கு எதிரே ஆண்களுக்கும், வலது புறத்தில் பெண்களுக்கும் என தடுப்பு சுவருடன் பிரித்து வைத்திருப்பார்கள்.

இடைவேளையின் போது சோடா, ஆரஞ்சு கலர், கடலை மிட்டாய், பட்டாணி என்று குடிக்கவும், திண்ணவும் பொருட்கள் அமர்ந்திருக்கும் இடம் தேடி வரும். 

டிக்கெட் கவுண்டருக்கு வரிசையில் செல்ல இருபுறமும் எலந்தை முள் வேளி அமைத்திருப்பார்கள்.

திரையரங்கில் படம் மாற்றும் போது, சில சமயம் சிவப்பு கலரிலும், சில சமயம் பச்சைக் கலரிலும் போஸ்டர் ஒட்டி சொல்வார்கள். அதில் என்ன படம், யார் யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல் இடம் பெற்றிருக்கும்.

காலையில் சைக்கிளில் வந்து போஸ்டர் ஒட்டி சென்றால், மதியம் ஒரு கூண்டு வண்டியின் இரு பக்கமும் கலர் போஸ்டர் ஒட்டிய தட்டியை கட்டி, மேலே ஒலிபெருக்கியை கட்டி, பாட்டுப் போட்டுக் கொண்டு வருவார்கள். ஒரு பாட்டு முடிந்ததும் படத்தைப் பற்றிய அறிவிப்பை கரகர குரலில் ஒருவர் பேசுவார். அந்த சத்தம் வயல் காடுகளில் வேலை செய்து கொண்டிருக்கிற மக்கள் வரை சென்றடையும். அவரது பேச்சே, படம் பார்க்க தூண்டுகிற ஆவலை ஏற்படுத்தும்.

தூரத்தில் இருப்பவர்கள் சத்தத்தை கேட்டு, என்ன படம் போட்டிருக்காங்க? யார் நடிசிருக்கா? சிவாஜி படமா?, எம்.ஜி.ஆர்.படமா?, ஜெமினி படமா? ஜெய்சங்கர் படமா?, முத்துராமன் படமா? என்கிற கேள்வியெல்லாம் கேட்பார்கள்.

நானும் என் வயதொத்த சிறுவர்களும், அந்த கூண்டு வண்டியின் பின்னாலே ஓடிச் சென்று, துண்டு நோட்டிஸை வாங்க, எங்கள் வீரதீரத்தை காட்டுவோம். அவரும் லேசில் தரமாட்டார். கூட்டம் அதிகமானல், நோட்டீஸ் வாங்கும் போது பறித்து கிழித்து விடுவோம் என, நோட்டீஸை அள்ளி வீசுவார். அதை தாவி பிடித்த தருணத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. அது ஒரு கொண்டாட்டமான அனுபவம்தான்.

அப்படி போட்டி போட்டு வாங்கி வந்த நோட்டிசை எங்கள் வீட்டு கதவில் ஒட்டி வைப்பேன்.

ஆசைப்பட்ட படத்தை நாங்கள் நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியாது. எங்க வைத்தி மாமா மனைவி வனரோஜா, மனசு வைத்தால்தான் பார்க்க முடியும்?.

மாளிகை கடையிலும், மாட்டு தொழுவத்திலும், வயல் காட்டிலும் கிடந்து எப்போதும் கஷ்டப்படுவார், வனரோஜா மாமி. அலுத்து, சலித்து படுக்க கூட நேரம் இருக்காது. ஓய்வில்லாமல் உழைக்க கூடிய கடும் உழைப்பாளி அவர். எங்க மாமாவும் அப்படித்தான். அந்த குடும்பத்தை உயர்த்த அவர்கள் பாடுபட்டார்கள்.

இப்படி வருஷம் முழுவதும் கஷ்டப்படும் எங்கள் மாமி, எனது அம்மா உட்பட மற்ற பெண்மணிகள் கேட்டுக் கொண்டதற்காக படம் பார்க்க முயற்சி எடுப்பார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்பதால், மாமாவும் சம்மதிப்பார்.

வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு, இரவு இரண்டாவது காட்சி பார்க்க தயாராவார்கள். தெருவில் உள்ள கிழம் கட்டையில் இருந்து பொடுசுகள் வரை பார சுமக்கும் வண்டி முழுவதும் அடைத்து அமர்ந்து இருப்பார்கள். நான் கால்களை தொங்கவிட்டபடி வண்டி ஓட்டுபவர் அருகில் அமர்ந்து கொள்வேன்.

மகிழ்ச்சியும், கூச்சலுமாக வண்டி ஆர்பாரிப்போடு செல்லும். மந்தை ரோடு கடக்கும் போதே இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்கான அறிப்பு, அதாவது மேள ரெக்கார்டு போட்டுவிடுவார்கள்.

இன்னைக்கு பாதி படம்தான் பார்க்கப் போகிறோம் என்கிற வருத்தமும், லேட்டாக கிளம்பியவர்கள் மீது ஆத்திரமும் உண்டாகும்.

6 திரையரங்கில் படத்தை நிறுத்திய அப்பா


ஜி.பாலன் 
சிறு வயதில் முதலில் பார்த்தப் படம் என்று நினைவுக்கு வருவது ‘தசாவதாரம்’. அதன் பிறகு ‘அன்னக்கிளி’, ‘பாலாபிஷேகம்’, ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘குறத்தி மகன்’ என சில படங்களை எடையூர் சரவணா திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.

‘அன்னக்கிளி’ படம் பார்த்த போது படத்தின் இறுதியில் தியேட்டர் எரிவது போல காட்சி இடம் பெறும். அப்போது உண்மையிலேயே தியேட்டர் எரிகிறது என்று நினைத்து பயந்து வெளியே தப்பித்து செல்ல முயன்றேன். பிறகு என்னை பிடித்து இழுத்து வந்து அமர வைத்த அம்மா, படத்தில் தான் அந்த காட்சி இடம்பெறுகிறது என்று உணர்த்தினார்.

‘குறத்தி மகன்’ படம் பார்த்த போது இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு நின்று கொண்டே படம் பார்த்தோம். இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அனுபவங்கள் இருக்கிறது. எல்லாம் சுவராஸ்யமானவை.

திரையரங்கில் ‘தில்லானா மோகனம்பாள்’ படம் ஓடிக்கொண்டிருத்த போது, எங்க வைத்தி மாமா மனைவி வனரோஜாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தாள் அதனால், அவளுக்கு மோகனாம்பாள் என்று பெயர் வைத்தார்கள்.

நாங்கள் படம் பார்க்க சென்றால், அப்பாவும் வந்து விடுவார். ஆனால், சைக்கிளில் தனியாக வருவார். அந்த காலத்தில் எங்கள் கிராமத்தில் மூன்று பேர்தான் சைக்கிள் வைத்திருந்தார்கள். அதில் எங்க அப்பாவும் ஒருவர். அது இங்கிலாண்டு சைக்கிள். சைக்கிளுக்கு காத்து அடிக்க உதவும் பம்பு, திரி வைத்த லாந்தர் விளக்கு என எல்லாம் அதில் இருந்தது.

எங்க அப்பா பெஞ்சு டிக்கெட் எடுத்து உள்ளே வந்திருக்கிறார். படம் போட்டு பத்து நிமிடம் ஆகி இருக்கும். அவருக்கு உட்கார  இடம் கிடைக்கவில்லை. திரையரங்கு ஊழியர்களிடம் சொல்லி இருக்கிறார். அவர்கள் கண்டு கொள்ள வில்லை.

புரஜக்டர் வழியாக திரைக்கு வரும் ஒளியை தோள் துண்டை எடுத்து சுருட்டி அதில் திணித்து மறைத்துவிட்டார். திரையில் ஒலி கேட்கிறது. படம் தெரியவில்லை என்றதும் ஒரே விசில் சத்தமும், கூச்சலுமாக இருந்தன.

ஆபரேட்டர் தூங்கிவிட்டார் என்று சிலர் கத்தினார்கள். பிறகு மின் விளக்குகள் எரிய, சத்தம் நின்றது. ஊழியர்கள் ஓடி வந்து பார்த்தார்கள். அப்பாவின் செய்கையை கண்டு அவர்கள் திகைத்தார்கள். அப்பாவின் முகத்தையும் கோபத்தையும், பார்த்த மேனேஜர் மிரண்டு போனார். பிறகு அப்பாவுக்கு ஸ்பெஷல் புதிய தகர நாற்காலி கொண்டு வந்து கொடுத்து அமர வைத்தார்கள். அதன் பிறகு படம் திரையிடப்பட்டது.

படம் பார்க்கவே விருப்பம் இல்லாத அப்பா, எங்களுக்காக படம் பார்க்க வருவார். ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்கிற அச்சம்

அப்பா இறந்த பிறகு, நண்பர்களுடன் இரவு காட்சி படம் பார்க்க தனியாக செல்வேன். அப்போது சரவணா டாக்கீஸ் பெயருக்கு பதிலாக பாலமுருகன் என திரையரங்கிற்கு பெயர் மாறியது.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் திருத்துறைப்பூண்டி பிரகநாயகி, வாசன் தியேட்டர்களில் மேட்னி ஷோ பார்க்க செல்வோம். சில சமயம் பட்டுக்கோட்டை வீரா, அய்யா, நீலா, ராஜாமணி போன்ற திரையரங்குகளுக்கு செல்வோம், ஒரே நாளில் மூன்று படம், நான்கு படம் என்று பார்த்துவிட்டு திரும்புவோம். 

திருத்துறைப்பூண்டி பிரகநாயகி, திரையரங்கில் மௌனகீதம், படம் பார்த்துவிட்டு வந்து மேடைகளில் ‘’டாடி டாடி ஒமை டாடி’’ பாடலை பாடி இருக்கிறேன்.

பிரகநாயகியில் அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்க்க செம கூட்டம். நானும் என் நண்பர்களும் ‘மன்னன்’ படத்தில் ரஜினி டிக்கெட் எடுக்க செல்வது போல, சென்றோம். நாங்கள் இடித்துக் கொண்டும் முந்திக் கொண்டும் செல்வதை பொறுக்க முடியாத ஒருவர், என் நண்பனை நெருக்கி தள்ளி விட்டார். 

டிக்கெட் எடுத்து வெளியே வந்ததும் அவனது கைகளில் ஏற்பட்ட சிராய்புகளை பார்த்து கோபம் வந்துவிட்டது. அதற்கு காரணமான அவரை எல்லோரும் சேர்ந்து அடிப்பது என்று முடிவு செய்தோம்.

வியர்வை சொட்ட, சொட்ட, சட்டையை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டு கவுன்டரைவிட்டு வெளியே வந்த அவரைப் பார்த்து கை காட்டினான் நண்பன்.

அவரைக் கண்டதும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவர் எனது உறவினார். ‘’டேய்.. அவர் எங்க ஓருர் வீரையா சித்தப்பாடா...’’ என்று கூறி அவர்களை தடுத்துவிட்டேன்.

இதெல்லாம் சித்தப்பாவுக்கு தெரியாது. அநேகமாக இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தால், கண்டிப்பாக சிரித்துக் கொள்வார்.

இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவரே, சினிமாவைப் பார்க்க சட்டையை கழட்டிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட படம் பார்க்க வந்தால், சினிமா எவ்வளவு ஈர்ப்புள்ள சாதனம் என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது.

அப்போதுதான் முதன் முதலாக பாரதிராஜா மனதிற்குள் வந்தார். படம் பார்த்துவிட்டு வந்த பின்னர் மனதில் அலைகள் ஓயவில்லை.

நாமும் சினிமாவுக்கு சென்று நடிக்க வேண்டும். இதே போல நமது கிராமத்து மக்கள் நமது படத்தையும் காண தியேட்டருக்கு வரவேண்டும் என்று மனதுக்குள் எழுந்தது சிந்தனை.

என் திரையுலக அனுபவங்கள்

G.BALAN, FILM DIRECTOR கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஐம்பது வயதை தொட்ட போது , நமது அனுபவங்களை பதிவு செய்ய வேண்டும் என...